15.The Rock
- அலிஃப் லாம் றா. (நபியே!) இவை (முந்திய) வேதங்களுடைய இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனுடைய (சில) வசனங்களாகும்
- தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர்
- (நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்
- (பாவத்தில் மூழ்கிய) எவ்வூராரையும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணையிலேயே தவிர நாம் அவர்களை அழித்து விடவில்லை
- ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்
- (நம் நபியாகிய உம்மை நோக்கி) ‘‘வேதம் அருளப்பட்டதாகக் கூறுகின்ற நீர் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்'' என்று கூறுகின்றனர்
- ‘‘மெய்யாகவே நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (உமக்குச் சாட்சியாக) நீர் வானவர்களை அழைத்துக் கொண்டுவர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்)
- (நபியே!) நாம் வானவர்களை இறக்கிவைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழித்து முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்)
- நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம்
- (நபியே!) உமக்கு முன்னர் சென்றுபோன கூட்டங்களுக்கும் நிச்சயமாக நாம் தூதர்கள் பலரை அனுப்பிவைத்தோம்
- (எனினும்,) அவர்களிடம் (நமது) தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்கவில்லை
- (அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்திவிட்டோம்
- (ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். முன் சென்றவர்களுடைய நடைமுறை சென்றிருக்கிறது. (அவர்கள் அழிந்தது போல இவர்களும் அழிந்து விடுவர்)
- வானத்தில் ஒரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்துவிட்டு, அதில் பகல் நேரத்திலே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ளாமல்)
- ‘‘எங்கள் கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியம் செய்யப்பட்டு விட்டோம்'' என்றே கூறுவார்கள். (உண்மையை நம்பமாட்டார்கள்)
- நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அலங்காரமாகவும் ஆக்கி வைத்தோம்
- விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக்கொண்டோம்
- ஆகவே, (வானவர்களின்) ஒரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதைத் தவிர, (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜூவாலை அதை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும்
- நாம் பூமியை விரித்து, அதில் உறுதிமிக்க அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம்
- உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கின்ற எண்ணற்ற) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை நாமே அதில் அமைத்தோம்
- ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில்தான் நாம் இறக்கி வைக்கிறோம்
- மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பிவைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழை நீரை மேகத்திலும், நிலத்திலும்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்)
- நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்)
- உங்களுக்கு முன் சென்றவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்
- (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) ஒன்று கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்
- (காய்ந்தபின் ‘கன் கன்' என்று) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம்
- அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்
- (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான், மனிதனை (காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப்போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்
- ‘‘நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்'' (என்று கூறி, பிறகு, சிரம்பணிய கட்டளையிட்டான்)
- அவ்வாறே வானவர்கள் அனைவரும் (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்
- இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்
- (அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?'' என்று கேட்டான்
- அதற்கவன் ‘‘(காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிய தயாரில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)'' என்று கூறினான்
- அதற்கு இறைவன் ‘‘நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (நமது சமூகத்திலிருந்து) விரட்டப்பட்டு விட்டாய்'' என்று கூறினான்
- மேலும், ‘‘விசாரணை நாள் (வரும்) வரை உன் மீது நிச்சயமாக என் சாபமும் (கோபமும்) உண்டாவதாக!'' (என்றும் கூறினான்)
- அதற்கவன் ‘‘என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரை நீ எனக்கு அவகாசமளி'' என்று கேட்டான்
- அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்
- அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்
- அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்
- எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்ல) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)'' என்று கூறினான்
- அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி.’‘
- (மனத்தூய்மையுடைய) என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு ஒரு செல்வாக்கும் இருக்காது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர
- (உன்னைப் பின்பற்றிய) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான்
- அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள்
- நிச்சயமாக, இறையச்சமுடையவர்களோ சொர்க்கங்களிலும் (அதிலுள்ள) நீரருவிகளிலும் (உல்லாசமாக) இருப்பார்கள்
- (அவர்களை நோக்கி) நீங்கள் ஈடேற்றத்துடனும் அச்சமற்றவர்களாகவும் இதில் நுழையுங்கள்'' (என்று கூறப்படும்)
- (ஒருவருக்கு ஒருவர்மீது இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள்
- அதில் அவர்களை ஒரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்
- (நபியே!) நீர் என் அடியார்களுக்கு அறிவிப்பீராக: ‘‘நிச்சயமாக நான் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவேன்
- இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் மிக்க கொடிய வேதனை
- (நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீர் அவர்களுக்கு அறிவிப்பீராக
- அவர்கள் இப்றாஹீமிடம் சென்று ‘ஸலாமுன்' (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) என்று கூறியதற்கு, அவர் ‘‘நிச்சயமாக நான் உங்களைப் பற்றி பயப்படுகிறேன்' என்றார்
- அதற்கவர்கள், ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகன் ஒருவரைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்'' என்று கூறினார்கள்
- அதற்கவர் ‘‘இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்!'' என்று கூறினார்
- அதற்கவர்கள், (‘‘பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப் பற்றி) நீர் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்'' என்று கூறினார்கள்
- அதற்கவர், ‘‘வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனுடைய அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்'' என்றார்
- (பின்னர் வானவர்களை நோக்கி, ‘‘இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?'' என்று கேட்டார்
- அதற்கவர்கள் ‘‘(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள்
- ‘‘எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்). நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம்
- எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கி விடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்'' (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்)
- (இறைவனால்) அனுப்பப்பட்ட (அவ்)வானவர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது
- (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கிறீர்களே!'' என்று அவர் கூறினார்
- அதற்கவர்கள், ‘‘(உங்கள் மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்
- மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்து விடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம்
- ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்'' என்றார்கள்
- மேலும், நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அவ்வானவர்கள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம்
- (இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர்
- (லூத் நபி அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர்கள் என் விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவு படுத்தாதீர்கள்
- மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்'' என்று கூறினார்
- அதற்கவர்கள் ‘‘உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?'' என்று கூறினார்கள்
- அதற்கவர் ‘‘இதோ! என் பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களைத் திருமணம்) செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்
- (நபியே!) உம் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை)
- ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது
- அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை தலைக் கீழாகப் புரட்டிவிட்டோம்
- உண்மையைக் கண்டறிபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன
- நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப் போகக்கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது
- நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது
- (இவர்களைப் போலவே ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்
- ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் தெளிவான வழியில்தான் இருக்கின்றன
- (இவ்வாறே) ‘ஹிஜ்ர்' என்னும் இடத்திலிருந்த (ஸமூது என்னும்) மக்களும் நம் தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்
- நாம் அவர்களுக்கு நமது (பல) அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவற்றை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள்
- அச்சமற்று வாழலாம் எனக் கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள்
- அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது
- அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவற்றில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்க வில்லை
- வானங்களையும் பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரை இத்தீயவர்களின் விஷமத்தை) நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வருவீராக
- நிச்சயமாக உமது இறைவனே (அனைத்தையும்) படைத்தவன், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன் ஆவான்
- (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களை (உடைய ‘அல்ஹம்து' என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான (முழு) குர்ஆனையும் அளித்திருக்கிறோம்
- (பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர். எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான அன்பைக் காட்டுவீராக
- ‘‘நிச்சயமாக நான் தெளிவான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்'' என்றும் கூறுவீராக
- (நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே
- இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்)
- (ஆகவே,) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரிடமும் கேள்வி கணக்குக் கேட்போம்
- அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி
- ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்தறிவித்து விடுவீராக. மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக
- பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கை விட்டு) நிச்சயமாக நாமே உம்மைப் பாதுகாப்போம்
- இவர்கள் (உம்மைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள்
- (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உமது உள்ளத்தை நெருக்குகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீர் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்)
- நீர் உமது இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குவீராக
- உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக